Wednesday, July 27, 2011
Wednesday, July 20, 2011
தொடத் தொட... Article - 2004
தொடத் தொட...
----------------
ஒரு வித்தியாசமான/வினோதமான ரேடியோ
விளம்பரம் கேட்டதிலிருந்து
தொடர்ந்து மனதுக்குள் தோன்றிய எண்ணங்கள்தான் இந்த
கட்டுரையின் பிண்ணனி.
எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை, அதைக்
கேட்டதும் சிரிப்பதா ,தலையில் அடித்துக் கொள்வதா
என்று புரியவில்லை.
விளம்பரம் இதுதான் -
பிறந்த நாள், திருமண நாள், விசேஷ நாட்கள்
ஆகியவற்றுக்கு கடில் பார்ட்டிகள் (cuddle party) ஏற்பாடு
செய்யப்படும்.
உங்கள் வாழ்க்கையின் அவசியம் கடில் பார்ட்டிகள்.
நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு முப்பது டாலர்கள்,
ஜோடிகளுக்கு ஐம்பது டாலர்கள். அணுகவும் -
www.cuddleparty.com
அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம் இது போன்ற
கூத்துக்கள்!
அதாவது, ஒருவர் தமக்குத்தாமே புதிதாக ஒரு
உத்தியோகத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு இந்த கடில் பார்ட்டி முனைவர், "அரவணைப்பு
நிபுணர்" {Cuddling Expert}
என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளலாம்.
அரவணைத்தல், தழுவிக் கொள்ளுதல், முத்தமிடுதல்,
முதுகைத் தடிவிக் கொடுத்தல்.. இது போன்ற பல்வேறு
தொடுதல்களைப் பற்றி இவர் நன்கு அறிந்து
(ஆராய்ந்தும்?) வைத்திருப்பார்.
இந்த இந்தச் செயலால், இந்த இந்த விளைவுகள்,
நன்மைகள் கிடைக்கும் என்று புத்தகங்கள் எழுதுவார்.
பணக்காரர் ஆகிவிடுவார்.
ஆனால், மறுக்க முடியாது - இவருக்கு நல்ல வரவேற்பு
இருக்கிறது!
கடில் பார்ட்டிகளுக்கு காசு கொடுத்து போகவும் பெரிய
கூட்டம் இருக்கிறது இங்கே!
ஆனால், யோசித்துப் பாருங்கள். யார் யார் வருவார்கள்
இந்த பார்ட்டிகளுக்கு?
ஊறுகாய் உரசல்கள் கிடைக்குமே சில ஓணாய்கள் வருமா
வராதா?
நமக்கு எது தேவை, எது இருந்தால் நம் வாழ்க்கை
சந்தோஷமாக இருக்கும் என்று விளக்கிச் சொல்ல, ஒரு
மூணாவது மனிதர்
தேவைப் படுகிறார் என்றால், நம் வாழ்க்கைத் தரம் எந்த
நிலையில் இருக்கிறது என்று யோசிக்க வேண்டும்!
அமெரிக்க (மேற்கத்திய) வாழ்க்கை முறையைப் பற்றி
கூறும் போது,
ஆஷ்லி மாண்டெக், என்ற புகழ்பெற்ற சமூகவியல்,
மனிதவியல் எழுத்தாளர் -
"தீண்டாமை என்ற ஒரு புதிய இனத்தையே
உருவாக்கியிருக்கிறோம்" என்றார்.
Ashley Montague as saying, “We have produced a race of
untouchables.”
His quote speaks to his sense of the impersonality of life in the
Western World.
உண்மைதானே, நம் குடும்பத்தோடு, நம்
சிநேகிதங்களோடு, நம் பிள்ளைகளோடு, வாழ்க்கைத்
துணையோடு நாம் சந்தோஷமாக இருக்க,
ஒருவரை ஒருவர் தழுவி, அரவணைத்துக் கொள்வது எத்தனை
முக்கியம் என்று விளக்க இப்படி ஒரு கடில் பார்ட்டி
நிபுணர்!
அதற்கு முப்பது டாலர்கள் மொய் வேறு எழுத வேண்டுமாம்!
சம்பாதிக்கிறார், அது அவரது சாமர்த்தியம்.
ஆயினும்... இது யோசிக்க வேண்டிய ஒரு விஷயம்தான்.
"தொடுதல்"
நாம், மனித இனம், சகவாசப் பிரியர்கள், கூடிவாழும்
குணமுடையவர்கள், பரஸ்பரம் உறவு கொண்டாடுபவர்கள்,
சமூகம் என்கிற அமைப்பில் இணைந்து வாழ்பவர்கள்.
இப்படிப் பட்ட நமக்கு, தொடுதல் ஒரு உயிர்ச் செயல்.
உயிர் நிலைக்க வைக்கும் செயல். It is a subject of Survival!
பாலுட்டும் பிராணி வகைகள் அனைத்துமே, தமது சக்தி,
திறமை, ஆதிக்கம், அதிகாரம், பதவி, நிலை,
உரிமை ஆகியவற்றை உணர்த்த
தொடுதல் செய்கின்றன.
இதனை எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறோம். நமது
இயல்பின் படி வாழ்கிறோமா, அல்லது
திரவியம் தேடும் திரைகடலில் இந்த உண்மையான
பந்தச் செயலை மறந்திருக்கிறோமா?
கடில் பார்ட்டிகளுக்குப் போக வேண்டாம்தான்.
ஆனால், நம் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான
இந்த தொடுதலைப் பற்றி
கொஞ்சம் சீரியஸாக பேசுவொமா?
"Touch is part of our inherent genetic development" என்கிறார்
எலியட் க்ரீன். அமெரிக்க மசாஜ் தெரபி
அசோசியேஷனின் தலைவர்.
ஆபத்து வரும்போது, நமது மூளை, எதிர்த்துச் சண்டையிடு,
அல்லது ஓடு (Fight or Flight) என்று உடனே கட்டளை
பிறப்பிக்கிறது.
ஆனால், அன்பான தொடல் நிகழும்போது, பயம் இல்லை,
இது எனக்கு சுகமாக இருக்கிறது என்று இரத்தத்தில்
இனிமை சேர்கிறது.
அன்பையும், பாதுகாப்பு உணர்வையும் வெளிப்படுத்துகின்ற
தொடுதல், நம் தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து,
மனதையும்,
உடலையும் உற்சாக நிலைக்கு கொண்டு செல்கிறது.
அனாதை இல்லங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில்
சேர்க்கப்படும் பச்சைக் குழந்தைகள்,
தொடப்பட்டு, தடவப்பட்டு, ஆதரவாக அணைக்கப்பட்டு
வளர்ந்தால், எண்பது சதவிகிதம் உயிர் பிழைத்து
விடுகின்றனவாம்.
குழந்தைக்கு மட்டுமில்லாமல், தாய்மார்களுக்கும் இந்த
தொடுதல் விஞ்ஞான ரீதியாக பெரிதும் உதவுகிறது.
பசு போன்ற பிராணிகள், பிறந்தவுடன் குட்டிகளை
நாவால் நக்கும், இதனால் ஆக்ஸிடோசின் என்கிற
ஹார்மோன் அதிகமாக சுரக்கிறதாம், இது
கார்டிசோல் என்கிற மன அழுத்தம் உருவாக்கும்
சுரப்பியை கட்டுக்குள் வைக்கிறதாம்.
இந்த நக்குதலைச் செய்யாத தாய் மிருகங்கள் தமது
குட்டிகளைக் கடித்துவிடவும், விழுங்கிவிடவும் கூடும்.
அமெரிக்காவில் குழந்தை பிறக்கும்போது, கணவர்
மனைவியோடு முழு நேரமும் துணையாக இருக்கிறார்.
டாக்டர்களும் நர்சுகளும், மனைவியின் கையை பிடித்துக்
கொள்ளுங்கள், அவள் தோள்களை
தட்டிக் கொடுங்கள், நெற்றியில் முத்தமிடுங்கள் என்று
கணவரிடம் கூறிக் கொண்டே இருப்பார்கள்.
இதனால் பேறு வலியில் துடிக்கும் மனைவிக்கு இறுக்கம்
தளர்ந்து, குழந்தை பிறப்பது சுலபமாகிறது.
குழந்தை பிறந்தவுடன், அனேக பிரசவங்களில்,
தந்தைதான் நஞ்சினை வெட்டி குழந்தையை
அன்னையிடமிருந்து பிரிக்கிறார்,
இந்த சிறிய செயல் தகப்பனுக்கும், குழந்தைக்கும்
மதிப்பிட முடியாத பந்தத்தை உருவாக்குகின்றது
என்கின்றன ஆய்வுகள்.
அதே போல , குறைப் பிரசவத்தில் பிறக்கும்
குழந்தைகள் தொடப்பட்டு, ஆதரவாக அணைக்கப்பட்டும்
பாதுகாத்தால்,
ஆஸ்பத்திரியிலிருந்து சீக்கிரம் டிஸ்சார்ஜ் செய்யப்
படுகின்றனராம்.
மருத்துவர்கள், தொடுதல் இல்லாமைக்கும், மன அழுத்த
நோய்க்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கும் என்று
உறுதியாக நம்புகின்றனர்.
ஓரு அளவுக்கு தொடுதல் கிட்டாத போது, நோய், மன
அழுத்தம், கோபம் ஆகிய தீய விஷயங்கள் நம்மைத்
தாக்கக்கூடும்.
ஆக, பலநூறு வார்த்தைகளை விட, ஒரே ஒரு பாசமான
தீண்டலினால், ஆயிரம் மடங்கு அதிகமாக அன்பை
உணர்த்திவிடமுடியும்.
என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது
குழலினை அசைப்பாய்.. என்று காற்றின் தீண்டலை
எத்தனை அழகாக உயர்த்திப் பாடுகிறார்
பாரதிதாசன்!
கூடவே "தொடத் தொட மலர்ந்ததென்ன... பூவே" என்ற
சுகமான வைர வரிகளும் நினைவில் மிதக்கின்றன.
சந்திப்போம்.
அன்புடன்,
கற்பகம் இளங்கோவன்.



